Wednesday, January 13, 2010

நட்பு - ஆற்றாமை

உன் நிலையும் என் நிலையும்
ஊரறிந்த ஒன்று
இரு குடிசை அருகருகே
ஒரு வரிசை என்று
ஒன்றாக படித்தோமே
ஆரம்பத்தில் அன்று
மேல்நிலையை முடித்தோமே
ஒரே நிலையில் நின்று
சமமதிப்பெண் பெற்றோமே
இருவருமே இன்று


கல்லூரிக்கு விண்ணப்பித்தோம்
பட்டம் பெறவென்று
ஒரே துறையை தேர்ந்தெடுத்தோம்
நட்பு பிரியாதென்று
சான்றொன்று கேட்டுவைத்தார்
ஜாதி என்னவென்று
சரிவர தெரிந்துகொள்ள
தாயிடம் ஓடிச்சென்று
தாசில்தாரிடம் கேட்டுபெற்றோம்
ஜாதிக்கென்று சான்று
கடிதம் வர காத்திருந்தோம்
கல்லூரி சீட்டுக்கென்று
வந்ததுபார் உனக்குமட்டும்
எனக்கு இல்லையென்று


கல்லூரியில் கேட்டுவந்தேன்
காரணம் என்னவென்று
நாம் எடுத்த மதிப்பெண்
உன் ஜாதிக்கு உயர்ந்ததாம்
என் ஜாதிக்கு குறைந்ததாம்
எவருமே சொல்லவில்லை
ஜாதிக்கொரு மார்க்கு என்று


படித்துறையை பிரித்து வைத்தார்
ஜாதிக்காக அன்று - நம்மில்
படிக்கும் துறையில் பிரிவுதந்தார்
ஜாதியினால் இன்று
நட்பாலே இறுதிவரை
நீயும் நானும் ஒன்றே
அரசாலே அறிந்தோமே
இன்னஜாதி என்றே


முன்னோர்கள் விதைத்ததுதான்
வினையாகுது இன்று
இருந்தாலும் இளையவர்கள்
இளைத்தவர்கள் என்றால்
பொருளாதார நிலையறிந்து
வாய்ப்பளித்தல் நன்று


***** உரையாடல் போட்டிக்கவிதை *****

No comments:

Post a Comment