Friday, March 19, 2010

குடல் புற்று

அழுகிறது வாஷ் பேசின்
அதன் குடல் அடைக்கிறதாம்
அதற்கு வேண்டாமாம்
புகையிலையும்
பாக்கும், பான்பராக்கும்

Tuesday, March 16, 2010

வயது

பக்கத்து விட்டு பெண்ணானவள்
பழகுவதற்கு பூ மொட்டானவள்
பள்ளி காலம் தொட்டே
பழக்கம் எனக்கானவள்
இல்லம் மாறி போனாள் அவள்
இன்றும் இன்முகத்தோடு பேசுபவள்

பதின்ம வயதுகளில்
போடா வாடா என்பாள்
இருபதில் இருக்கையிலே
"ஹாய்" என்று சொல்லிச் சென்றாள்
தோழமையால் என்றிருந்தேன்

முப்பதில் முகம் பார்த்தால்
'அண்ணா' என்றழைப்பாள்
அன்பினால் என்றிருந்தேன்

நாற்பதில் நானிருக்க
'அங்கிள்' என்றாளே
அதிர்ச்சியில் வாயடைத்தேன்

ஐம்பதில் என்ன சொல்வாள்
'ஐயா' என்றழைப்பாளோ
நான் அவளை
பெயர் சொல்லி அழைத்து வந்தேன்
உறவு வைத்து அழைத்ததில்லை

ஆண்டாண்டு கடந்தாலும்
அவள் வயது
அப்படியே உள்ளதுவாம்
ஆணான எனக்கு மட்டும்
வயதேருவதெப்படியாம்?

Friday, March 12, 2010

போர்க்களம்

வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
பார்க்கலாம் என்றெண்ணங்கள்
வாழ்வோரைப் பார்க்கவே
பறந்து தான் சென்றன

வெடிச்சிரிப்பு கேட்டது
விழி வெளிவர பார்த்தது
வெற்றிக்கொடி நாட்டிய
சிங்கங்கள் சிரித்தது
வெறுத்து ஒதுங்கியே
வேங்கைகள் எங்கோ பதுங்கின

மீள் குடியேற்றிட
வெளியார் வேண்டிட
அடிக்கல் நாட்டிட
மீண்டும் குழி தோண்டிட
செம்புலம் பெயர்ந்த மண்ணில்
மறைந்த மறவரெல்லாம்
சகதியில் சதையாய் தோன்றிட
சங்கறுத்த நிலையாகிட
சாந்தியை தேடினேன் ஓடினேன்

தாகம் தணித்திட
ஆழ குழிதோண்டி
ஆழ் குழாய் போட்டதில்
அருவியாய் பாய்ந்தது
அத்தனையும் ரத்தம்
அப்படியே நின்றது - என்
நாடிச் சத்தம்

புத்தனை பூஜித்தவரின்
புத்தியும் புரியவில்லை
காந்தியை கற்பித்தவரோ
கற்றபடி நிற்கவில்லை

கொல்லும்படி ஆணை தந்த
கொற்றவனோ அங்கே
குலவி குற்றம் செய்தார்
மற்றவரோ இங்கே
சூழ் நிலையே சூனியமாய்
சுழலக் கண்டேன்
சுற்றி நின்ற சுற்றமெலாம்
சுழன்று விழவும் கண்டேன்

சட்டனவே விழியை திறந்து கொண்டேன்
கனவினின்று நானும் கண் விழித்தேன்
கேட்டதே கனவிலே கோர்வையாக
போர்க்கள காட்சியாக இங்கே
நிஜத்திலே நிற்குமா
எந்தன் ஆவி அங்கே

சொல்லடி

சொல்லாடி சொன்னடி சொல்லடி
சொல்லிலடித்தது ஏனடி
என்னையே எண்ணியே சொன்னியா
சொன்னதெல்லாம் உண்மையா
உனக்குள் நான் இனி இல்லையா
உறவை முறிப்பது தன்மையா

வெறுந்தாளாய் பறந்த என்னில்
கவிதை உன்னை எழுதிவைத்தேன்
அன்றோ ரசித்து படித்தவள் நீ
இன்றோ கிழித்து எறிந்தவள் நீ
கவியரங்கே கருத்தரங்கில்
கண்ட குறை என்ன கண்ணே
செந்தமிழே சங்கமத்தில்
சந்திப்பிழை கண்டாயோ
சொந்தமில்லை என்றாயோ


குரல் மொழியில் கீரனாகி
பொருட்குறை கண்டு நீயும்
கருவிழியில் கண்ணகியாய்
பந்தமில்லை என்று சொல்லி
பாண்டிசபையாக்கிச் சென்றாய்
பொறுமை உனக்கில்லையடி
வெறுமை எனை சேர்ந்ததடி
வெந்து நொந்தேன் - சொன்ன நொடி


துர்வாசர் வார்த்தையாலே
துஷ்யந்தனாகி நீயும்
துக்கத்தை தூக்கி தந்தே
சகுந்தலையாய் சாய்த்ததேனோ
மறக்கடி என்ற-அடி சொன்ன நொடி
மனம் கல்லடி-கண்ணாடி ஆனதடி
என் தசையடி
கசையடி தாங்குமடி
உன் வசையடி
விசையடி மாய்க்குதடி

விரிசல்

உயிரே உடலை பிரிந்தாலும்
உறவு நிலைதானே
உறவில் விரிசல் விழுந்தாலும்
உணர்வு எழும்தானே

கண்ணை இமை குத்தியதே
காயம்பட்டு இதயத்திலே
கொதிக்குது ரத்தம்

காதலனே கயவனாகும்
கோபத்தின் கோலமென்ன
மோகத்தில் விளைந்ததுவோ
மோசத்தில் முடிவதென்ன

பாசத்தை பொசுக்கிவிட்டு
நேசத்தை நெருப்பிலிட்டாய்
நொறுங்கியதுள்ளம்

மழைநீராய் இனித்தவளே
கடல் நீராய் கரித்ததென்ன
மரிக்கொழுந்தாய் மணத்தவளே
மந்திரமாய் ரௌத்திரத்தில்
தரித்திரமாய் காதலையே
சரித்ததென்ன சரித்திரத்தை

சீர்கெடவா சித்தரித்தோம் - காதல்
சித்திரத்தை கருத்தரித்தோம்
கத்தரித்தாய் கடிந்தே இன்று - மனம்
கதற கருவருத்தாய்

நச்சரித்தாய் காதல் தந்தே
நித்திரையில் நித்தம் வந்தே
எச்சரித்த எதிர்ப்பையெல்லாம்
எருவாக்கி வரிந்து நின்றேன்

மலரே முன்னம் சொன்னதென்ன
முள்ளாய் சொல்லில் தைத்ததென்ன
மனனத்தில் ஒப்பித்தாயோ - என்
மரணத்தில் சிந்திப்பாயோ

பார்த்தவளை பெற்று - அவளில்
பெற்றவளை பார்த்திருந்தேன்
மாற்றுடையாய் கழற்றியென்னை
மறந்து மறுத்துச் சென்றதென்ன

மனதை அரிந்து சென்றவளோ
எனதை எடுத்து சென்றுவிட்டாள்
திருப்பித்தர வருவாளோ - நான்
திருத்தம் தர தெளிவாளோ

பூவை பாதம் பார்ப்பதற்கே
பாதையில் படுத்தது பார்வை - வரும்
வழியில் வீழ்ந்தன விழிகள் - மறு
மொழிக்கு ஏங்கின செவிகள் - உன்
மொழிக்கு ஏங்கின செவிகள்

வான - மேக ஊடல்

மோகம் தந்த மேகம் இங்கே
வானம் விட்டு செல்வதெங்கே
உன்னில் என்னை அசுத்தமென்று
சத்தமிட்டு உதிர்வதெங்கே

சதி பதி என்றிருந்தோம்
சதி செய்த விதியாலே
விண்ணை விட்டு நீயும் சென்றால்
வெறுமையில் வெளுப்பாவேன்
ரத்தம் சுண்டி நான் சாவேன்

மண்ணிலே வீழ்வாயோ
மழையென பொழிவாயோ
மற்றவர்க்கு இனிப்பாக - எனை
மறந்து நீ சென்றாயோ

சுட்டெரிக்கும் சூரியனை
போகச்சொல்லி பணித்தேனே
என்னையன்றி குளிர் தருவார்
மண்ணில் உண்டோ சொல்லு கண்ணே
தாரமென தரித்திருந்தேன்
தாய் வீடு சென்றாயோ

விண்ணை விட்டு
மண்ணில் சென்றால்
அணை கட்டி அடைத்திடுவார்
அருவியாகி ஆறாய் போனால்
அவரவர்க்கு அழுக்கை வைப்பார்

கெஞ்சும் என் நெஞ்சம் தன்னில்
கொஞ்சமும் பொய்யில்லை - பெண்ணே
பாசத்திற்கும் பஞ்சமில்லை
நேசத்தில் வேஷமென்று
மோசம் செய்தல் பாவமன்றோ

ஆற்றாமை உனக்கு வந்தால்
அன்று என் நினைவு வந்தால்
கடற்கரைக்கு வந்துவிடு
கடலோடு இணைந்துவிடு - என்
கண்ணீரில் கரைந்துவிடு
காற்றிலே ஆவியாகி
எனை வந்து சேர்ந்து விடு

வானம் பார்த்த பூமியென்று
மண்ணிலுள்ளோர் சொல்வதுண்டு
புவியை பார்த்து வானம் இன்று
பூவே உனக்காய் தவம் புரியுதின்று

காதலோடு காத்திருப்பேன்
காற்று வெளி பார்த்திருப்பேன்
கன்னி கனிவாயா
காற்றாய் வருவாயா
எண்ணித் திருவாயில்
காதல் தருவாயா

Thursday, March 11, 2010

எல்லாம் உன்னாலே

அன்னையின் அடிவயிற்றை
உந்தி வந்த முதற்கொண்டு
முந்தி வந்த சொற்களெல்லாம்
உன்னாலே உன்னாலே

ஆரம்பப்பள்ளி முதல்
அருங்கணித, அறிவியலும்
ஆறாத வரலாறும்
அறிந்து தெளிந்ததெல்லாம்
உன்னாலே உன்னாலே

கண்ணிலே காண்பதுவும்
காதிலே கேட்பதுவும்
கணத்திலே அர்த்தமாகி
மனத்திலே பதிவாகும்
உன்னாலே உன்னாலே

பொருள் விளங்கி ஏற்ப்பதுவும்
பொருள் விளக்கி ஆற்றுவதும்
பொறுப்புணர்த்த ஏசுவதும்
பற்றாக்கி வசமாக்குவதும்
உன்னாலே உன்னாலே

அன்புமொழி அன்னைமடி துஞ்சியதும்
அளவளாவி அய்யனிடம் மிஞ்சியதும்
அள்ளி குழந்தையை கொஞ்சியதும்
காதலோடு குமரியை கெஞ்சியதும்
உன்னாலே உன்னாலே

ஆளாகி வளர்ந்து வந்தோம்
ஆங்கிலந்தின் அருகமர்தோம்
அதனையும் புரிந்திங்கு
உணர்ந்து உரையாற்றுவதும்
உன்னாலே உன்னாலே

அரவணைத்து அருள்புரிவாய்
அடங்கும் வரை உடனிருப்பாய்
அதன்பின்னும்
எம் பெயர் நிலைக்க
நற்பெயரெடுப்பேன்
உன்னாலே உன்னாலே

எம்மொழியே தாய்மொழியே
செம்மொழியே செந்தமிழே
செங்குருதி கலந்த உன்னை
காலமெலாம் போற்றிடுவேன்
கைகொடுத்து கரம் பிடித்து
காட்டிடுவாய் நல்வழியே
என்றும் நீ எனக்கு
எம்தமிழே எம்தமிழே

Friday, March 5, 2010

பனித்துளி

முகிழும் நிலவும்
மகிழ்ந்து குலாவின
இரவின் இருளில்
வானமெத்தையில் ...

விடியலில் வியர்வை
வழிந்து விழுந்தது
புல்தரை பூமியில்
பனித்துளியாய் ...


Monday, March 1, 2010

மறுக்காதே

மறுக்காதே

பெண்ணே!

காதல் என்ன

கருப்பு பணமா?

நான் என்ன

I. T. O. வா?

உள்ளுக்குள் இருந்தாலும்

இல்லையென்று மறைக்கிறாய்

பெண் காவலர்கள்

பெண் காவலர்கள்

அரசு அரணுக்காக

முட்களோடு சூடிய

அழகிய ரோஜாக்கள்