அன்னையின் அடிவயிற்றை
உந்தி வந்த முதற்கொண்டு
முந்தி வந்த சொற்களெல்லாம்
உன்னாலே உன்னாலே
ஆரம்பப்பள்ளி முதல்
அருங்கணித, அறிவியலும்
ஆறாத வரலாறும்
அறிந்து தெளிந்ததெல்லாம்
உன்னாலே உன்னாலே
கண்ணிலே காண்பதுவும்
காதிலே கேட்பதுவும்
கணத்திலே அர்த்தமாகி
மனத்திலே பதிவாகும்
உன்னாலே உன்னாலே
பொருள் விளங்கி ஏற்ப்பதுவும்
பொருள் விளக்கி ஆற்றுவதும்
பொறுப்புணர்த்த ஏசுவதும்
பற்றாக்கி வசமாக்குவதும்
உன்னாலே உன்னாலே
அன்புமொழி அன்னைமடி துஞ்சியதும்
அளவளாவி அய்யனிடம் மிஞ்சியதும்
அள்ளி குழந்தையை கொஞ்சியதும்
காதலோடு குமரியை கெஞ்சியதும்
உன்னாலே உன்னாலே
ஆளாகி வளர்ந்து வந்தோம்
ஆங்கிலந்தின் அருகமர்தோம்
அதனையும் புரிந்திங்கு
உணர்ந்து உரையாற்றுவதும்
உன்னாலே உன்னாலே
அரவணைத்து அருள்புரிவாய்
அடங்கும் வரை உடனிருப்பாய்
அதன்பின்னும்
எம் பெயர் நிலைக்க
நற்பெயரெடுப்பேன்
உன்னாலே உன்னாலே
எம்மொழியே தாய்மொழியே
செம்மொழியே செந்தமிழே
செங்குருதி கலந்த உன்னை
காலமெலாம் போற்றிடுவேன்
கைகொடுத்து கரம் பிடித்து
காட்டிடுவாய் நல்வழியே
என்றும் நீ எனக்கு
எம்தமிழே எம்தமிழே
Thursday, March 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment