Friday, March 12, 2010

வான - மேக ஊடல்

மோகம் தந்த மேகம் இங்கே
வானம் விட்டு செல்வதெங்கே
உன்னில் என்னை அசுத்தமென்று
சத்தமிட்டு உதிர்வதெங்கே

சதி பதி என்றிருந்தோம்
சதி செய்த விதியாலே
விண்ணை விட்டு நீயும் சென்றால்
வெறுமையில் வெளுப்பாவேன்
ரத்தம் சுண்டி நான் சாவேன்

மண்ணிலே வீழ்வாயோ
மழையென பொழிவாயோ
மற்றவர்க்கு இனிப்பாக - எனை
மறந்து நீ சென்றாயோ

சுட்டெரிக்கும் சூரியனை
போகச்சொல்லி பணித்தேனே
என்னையன்றி குளிர் தருவார்
மண்ணில் உண்டோ சொல்லு கண்ணே
தாரமென தரித்திருந்தேன்
தாய் வீடு சென்றாயோ

விண்ணை விட்டு
மண்ணில் சென்றால்
அணை கட்டி அடைத்திடுவார்
அருவியாகி ஆறாய் போனால்
அவரவர்க்கு அழுக்கை வைப்பார்

கெஞ்சும் என் நெஞ்சம் தன்னில்
கொஞ்சமும் பொய்யில்லை - பெண்ணே
பாசத்திற்கும் பஞ்சமில்லை
நேசத்தில் வேஷமென்று
மோசம் செய்தல் பாவமன்றோ

ஆற்றாமை உனக்கு வந்தால்
அன்று என் நினைவு வந்தால்
கடற்கரைக்கு வந்துவிடு
கடலோடு இணைந்துவிடு - என்
கண்ணீரில் கரைந்துவிடு
காற்றிலே ஆவியாகி
எனை வந்து சேர்ந்து விடு

வானம் பார்த்த பூமியென்று
மண்ணிலுள்ளோர் சொல்வதுண்டு
புவியை பார்த்து வானம் இன்று
பூவே உனக்காய் தவம் புரியுதின்று

காதலோடு காத்திருப்பேன்
காற்று வெளி பார்த்திருப்பேன்
கன்னி கனிவாயா
காற்றாய் வருவாயா
எண்ணித் திருவாயில்
காதல் தருவாயா

No comments:

Post a Comment