Friday, March 12, 2010

விரிசல்

உயிரே உடலை பிரிந்தாலும்
உறவு நிலைதானே
உறவில் விரிசல் விழுந்தாலும்
உணர்வு எழும்தானே

கண்ணை இமை குத்தியதே
காயம்பட்டு இதயத்திலே
கொதிக்குது ரத்தம்

காதலனே கயவனாகும்
கோபத்தின் கோலமென்ன
மோகத்தில் விளைந்ததுவோ
மோசத்தில் முடிவதென்ன

பாசத்தை பொசுக்கிவிட்டு
நேசத்தை நெருப்பிலிட்டாய்
நொறுங்கியதுள்ளம்

மழைநீராய் இனித்தவளே
கடல் நீராய் கரித்ததென்ன
மரிக்கொழுந்தாய் மணத்தவளே
மந்திரமாய் ரௌத்திரத்தில்
தரித்திரமாய் காதலையே
சரித்ததென்ன சரித்திரத்தை

சீர்கெடவா சித்தரித்தோம் - காதல்
சித்திரத்தை கருத்தரித்தோம்
கத்தரித்தாய் கடிந்தே இன்று - மனம்
கதற கருவருத்தாய்

நச்சரித்தாய் காதல் தந்தே
நித்திரையில் நித்தம் வந்தே
எச்சரித்த எதிர்ப்பையெல்லாம்
எருவாக்கி வரிந்து நின்றேன்

மலரே முன்னம் சொன்னதென்ன
முள்ளாய் சொல்லில் தைத்ததென்ன
மனனத்தில் ஒப்பித்தாயோ - என்
மரணத்தில் சிந்திப்பாயோ

பார்த்தவளை பெற்று - அவளில்
பெற்றவளை பார்த்திருந்தேன்
மாற்றுடையாய் கழற்றியென்னை
மறந்து மறுத்துச் சென்றதென்ன

மனதை அரிந்து சென்றவளோ
எனதை எடுத்து சென்றுவிட்டாள்
திருப்பித்தர வருவாளோ - நான்
திருத்தம் தர தெளிவாளோ

பூவை பாதம் பார்ப்பதற்கே
பாதையில் படுத்தது பார்வை - வரும்
வழியில் வீழ்ந்தன விழிகள் - மறு
மொழிக்கு ஏங்கின செவிகள் - உன்
மொழிக்கு ஏங்கின செவிகள்

No comments:

Post a Comment